கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 மார்ச், 2012

மாடசாமியின் மகத்தான சாதனை

மாடசாமியின் மகத்தான சாதனை

அது ஒரு அழகான கிராமம். ஆனை அம்பாரி என ஆண்ட பூமி.. காலத்தின் கோலத்தால் கட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடி கழனியை அழித்தது போல நல்லா இருந்த குடும்பங்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் துயர சம்பவங்கள் நிழந்து விட ஊரில் பேயும், பிசாசும் குடியிருக்கின்றதென்று பலர் பயந்து கொண்டு கைக்கு வந்த விலைக்கு அந்த ஊரில் இருந்த நிலக்கிழாரும் , புதிதாக வீட்டு மனை விற்பனையில் இறங்கியிருக்கும் முனிசாமியிடம் கொடுத்து விட்டு, அதிலிருந்து கிடைத்த காசைக் கொண்டு பட்டணத்தில் வாழலாம் என்று எண்ணி பலர் பட்டணம் நோக்கிச் சென்று விட்டனர்.

அந்தக் கிராமத்தில் மாடசாமி ஒரு நிலக்கிழார் வாழ்ந்து வந்தார். அவர் எதையும் சீர்தூக்கிப் பார்த்து செயல் படுத்தும் ஆன்மீக வாதி!. மக்கள் எதனால் கிராமத்தை விட்டு வெளியேறுகின்றார்கள் என்று புரியாமலே காலத்தை கடத்திக் கொண்டிருந்தார்.

மாடசாமிக்கு பொன்னுத்தாய் என்ற அன்பான மனைவியும் அழகன், குணவன் என்று இரண்டு மகன்களும் , வள்ளி என்ற ஒரு மகளுமாக மொத்தம் ஐந்து பேர். மாடசாமியின் நிலத்தில் வேலை பார்க்க ஆட்கள் உள்ளுரிலிருந்தே வந்து கொண்டிருந்தனர். அதனால் அவர் தன் மகன்களை அழைத்து விவசாயம் பற்றியும், தரமான விளைச்சலை எப்படி பெருக்குவது என்பது குறித்தும் சொல்லிக் கொடுத்திருந்தார். மகன்களும் விவசாயம் பற்றி கொஞ்சம் படித்திருந்தாலும் விவசாயம் செய்வது தங்கள் மூதாதையர் வழி வழியாக மகிழ்வோடு செய்து வருவதால் அந்த வேலையிலே மும்முரமாக இறங்கி விட்டார்கள்.

ஒரு நாள் ஊருக்கு கார் ஒன்று வந்தது. அதில் முனிசாமியும் வந்திறங்கினான். முனிசாமி பட்டணத்தில் இருந்து சில பணக்காரர்களைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தான். தன் கைவசம் உள்ள நிலத்தை சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தான். ஊருக்குள் புதிதாய் வந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களை யார் என்று முனிசாமியிடம் மாடசாமி கேட்ட பொழுது முனிசாமி தலையில் இடி இறங்கும் விசயத்தை சொல்லி முடித்தான்.

அதாவது தன் நிலத்தையெல்லாம் பட்டணத்தில் இருந்து வந்திருக்கும் இந்த பணக்காரர்களுக்கு கொடுத்து அவர்கள் தொடங்க விருக்கும் தொழிற்சாலையில் அவர்களுடன் பங்குதாரராக இருக்கப் போவதாக தெரிவித்தான்.

இதனைக் கேட்ட மாடசாமிக்கு கோபம் வந்தது, ஆனால் வெளிக் காட்டிக் கொள்ளாமல் முனிசாமியிடம் இதனை செய்ய வேண்டாம் என்றும் இதனால் ஊருக்குள் மக்களுக்கு பல தீங்குகள் விளையலாம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

முனிசாமியோ இதனை சரியாக காது கொடுத்து கேளாமல் தான் எடுத்த முடிவை மாற்ற மாட்டேன் என்றும் தன் இடம் தானே முடிவு செய்வேன் என்றும், யாரும் தனக்கு சொல்ல வேண்டாம் என்று ஆத்திரமாக பேசினான்.

கையில் நிலம் இருந்தவர்களே விற்று விட்டு பட்டணம் சென்றாலும் அடித்தட்டு மக்கள் எங்கும் போக வழியில்லாத காரணத்தால் அந்த ஊரிலே பயந்து கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஊரில் மக்கள் இங்கே பார்த்தேன் பேயை; அங்கே பார்த்தேன் பிசாசை , கருப்பாய் வந்தது, மாடு மாதிரி ஓடிச் சென்றது என்று கூட்டம் போட்டு பேசிக் கொண்டிருந்தனர். எங்கு சென்றாலும் கூட்டம் கூட்டமாகவே சென்று வந்தனர். வயல் வேலைக்கு சென்று கொண்டிருந்தாலும் பயந்து பயந்தே காலம் கழித்துக் கொண்டிருந்தனர்.

இதனால் மாடசாமியின் வயல் வேலைக்கு ஆட்கள் வரத்தில் மந்தம் ஏற்பட்டு விட்டது. களை எடுக்கும் பருவத்தில் நின்ற நெற் பயிர்களும், தண்ணீர் பாய்ச்ச வேண்டிய சூழ்நிலையில் இருந்த மிளகாய் செடிகளும் ஆட்களுக்காய் ஏங்கி நின்றன.

பகலென்றும், இரவென்றும் பார்க்காமல் மாடசாமியின் குடும்பமே வயற்காட்டில் தான் கிடந்தது. சரியான நேரத்தில் சாப்பிடாமல் கூட வயல் வேலையிலேயே மும்முரமாக செய்து கொண்டிருந்தனர்.

கூலி ஆட்களை நாடிச் சென்ற அழகன் ஒவ்வொரு முறையும் ஒருவர் இருவர் என குறைந்த எண்ணிக்கையிலேயே வேலைக்கு ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்தான். இதுக்கு மேலே ஆட்கள் வர மறுக்கின்றார்கள் என்று தன் தந்தையிடம் வருத்தத்துடன் தெரிவித்தான்.

ஆட்கள் வேலைக்கு வர மறுக்கின்ற என்ன காரணம் என்று மீண்டும் ஆழமாக சிந்திக்க ஆரம்பித்தார் மாடசாமி. முனிசாமியிடம் பேசிய போது அவன் பேசிய விதம், அவன் நடந்து கொண்ட தன்மை என்றெல்லாத்தையும் மீண்டும் தன் வீட்டில் உள்ள கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு அசைபோட ஆரம்பித்தார்.


தான் யோசனையின் விளைவாக ஒரு புதிய தீர்வைக் கண்டு பிடித்தார். அதன் படி தன் வயலில் வேலை பார்த்து விட்டு வரும் போது ஒரு தங்கச் சங்கிலி ஒன்று வழியில் கிடந்ததாகவும் சொன்னார். அது யாருடையது என்று தெரியவில்லை என்றும் அதனை சரியான அடையாளம் சொல்லி பொருளைத் தவற விட்டவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார். பேய் பிசாசைப் பற்றி பேசிக்கொண்டிருந்த மக்கள் இப்போது தங்கச்சங்கிலி பற்றி கூட்டம் கூட்டமாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு நாள் முனிசாமி குடித்து விட்டு ஊரில் இருந்த மற்றவருடன் பேசிக் கொண்டிருந்த போது தானும் பட்டணத்துப் பணக்காரர்களும் திட்டமிட்டு தான் ஊரில் சில சம்பவங்களை நிகழ்த்தியதாகவும் விவசாயத்தை விட பிற தொழில்களில் தான் முதலீட்டைப் போட்டு பணம் பெருக்கப் போவதாகவும் உளறி விடவே, அந்த வழியாக போய்க் கொண்டிருந்த குணவன் காதில் தெளிவாகப் பட்டது. உடனே ஊர் மக்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் ஒரு மரத்தடியில் கூடினர்.

ஊரில் இருந்த மற்ற முக்கியமானவர்கள் முனிசாமியிடம் விசாரணை நடத்த ஆரம்பித்தார்கள். முடிவில் தன் செய்த தவறை வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள வேண்டியாதாகிப் போகவே ஊர் மக்கள் அனைவரும் முனிசாமியை ஊரை விட்டுத்துரத்த வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர்.

அப்போது ஊர் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த மாடசாமி எழுந்து பேச ஆரம்பித்தார்.

முனிசாமியின் செயலுக்கு ஊர் சபை தண்டனை கொடுத்தாலும் அவனை மன்னித்து விடுமாறு இந்த ஊர் சபையைக் கேட்டுக் கொள்கின்றேன். விவசாயம் ஒன்னும் கேவலமான தொழில் அல்ல. முனிசாமியின் தந்தையும் மிகப் பெரிய விவசாயியே ; முனிசாமியும் ஒரு சிறந்த விவசாயியே ; ஒரு விவசாயி என்பவன் எவ்வளவு உயர்வான மனிதன் தெரியுமா. கடவுளுக்கு ஒப்பானவன். எத்தனையோ உயிர்களின் பசியை தீர்க்கும் அட்சய பாத்திரம்.; விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும்.

அத்தன்மை பொருந்திய விவசாயத்தை நாம் தொடர்ந்து பரம்பரையாக செய்து வரல் வேண்டும். பட்டினத்தில் இருந்து வந்தவர்களால் தான் முனிசாமிக்கு மனம் மாறி விட்டது என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் தொழிற்சாலை கட்ட விவசாய நிலத்தை கேட்காமல் வேறு தரிசான நிலத்தை மக்களுக்கு தீங்கு விளைக்கா வண்ணம் இருக்கும் இடத்தினை தேர்வு செய்து கொள்ளலாமே!!

முனிசாமி தான் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்று முடிவை முனிசாமியின் மீது திணித்தார். இதனைக் கேட்ட முனிசாமி தன செயலுக்கு மனம் வருந்தியதோடு தொழிற்சாலையை வேறு ஒரு இடத்தில் அமைத்துக் கொள்வதாகவும் சொல்லினான்.

அது சரி அப்போ அந்த தங்க சங்கிலி என்னாச்சு....

அதை நீங்க தான் சொல்லனும்.

சொல்லிக் கதையை முடிங்க..

திரும்பிப்பார்க்கின்றேன்.

திரும்பிப்பார்க்கின்றேன்.

அது ஒரு அழகான, அமைதியான கிராமம். அந்தக்கிராமத்திலே மருதப்பன் - முத்தம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். மருதப்பன் பெரும்செல்வந்தனாக இல்லாவிடிலும் ஒரு சிறு விவசாயியே.. அவர் சம்பாதித்தது, மூதாதையார் வழிச்சொத்து என சேர்த்து மொத்தம் 2 ஏக்கர் நஞ்சையும், 1.5 ஏக்கர் புஞ்சையும் தன் வசம் வைத்திருந்தார். அவர் பகல் பொழுது முழுதும் தனது விவசாய நிலங்களிலே வேர்வை சிந்த உழைப்பது அவருக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.


முத்தம்மாள் தன் வேலை, அவருடைய வேலை என பாரபட்சம் பார்க்காமல் நம் வேலையே என போட்டிபோட்டு தங்கள் கழனியில் வியர்வை சிந்த உழைத்துக்கொண்டிருந்தனர். இந்த தம்பதிகளுக்கு 3 பிள்ளைகள். மூத்தவன் கார்மேகம், அடுத்தது லட்சுமி, கடைக்குட்டி வசிகரன்.
லட்சுமி பிறந்த 8 வருடங்கள் கழித்தே வசிகரன் பிறந்தான். எல்லோருக்கும் வசிகரன் மேல் அலாதிப்பிரியம். வசிகரன் அளவற்ற பாசத்துடனும்,தனக்குள் ஒரு இறுமாப்புடனும் வளர்ந்து வந்தான்.

மூத்தவர் கார்மேகம் படிப்பில் அதிகம் விருப்பமில்லாமல் விவாசாய வேலை செய்வதையே மும்முரமாக கொண்டவர். அவரும் தன் பங்கிற்கு 10 வது வகுப்புவரை படித்து விட்டு விவசாயத்தில் ஈடுபட்டார். அடுத்தவர் லட்சுமி இவரும் தன் பங்கிற்கு காலேஜ் வரைக்கும் சென்று ஒரு டிகிரை வாங்கி விட்டார். நம் கடைக்குட்டியோ படிப்பில் பிரமாதம்.
ஒரு நாள்

“ஏங்க... நம்ம புள்ளைகளுக்கு வயசாகிக்கிட்டே போகுது, கல்யாணம் பண்ணி வைக்கிறதப்பத்தி என்ன யோசிச்சு வைச்சிருக்கீக..” இது முத்தம்மாளின் குரல்.

அப்பொழுது தான் காலையில் வயலில் தண்ணீர் பாய்ச்சி விட்டு காலைக்கஞ்சி குடிக்க திண்ணையில் உட்கார்ந்தார்.

“ஆமா முத்தம்மா.. நானும் இதப்பத்தி ஓங்கிட்ட சொல்லனும் நினைச்சேன். நம்ம மருவூரிலில ஒரு நல்ல வரன் இருக்குன்னு தரகர் தணிகாசலம் சொன்னார். வர்ர வெள்ளிக்கிழமை நாம போய் பார்த்துட்டு வந்துடுவோமா?” - இது மருதப்பனின் குரல்.

ஒருவழியாக எல்லோரும் சேர்ந்து வெள்ளிக்கிழமை கார்மேகத்திற்கு பெண் பார்த்து விட்டு வரலாம் என முடிவு செய்தனர். நினைத்தது போலவே கலையரசி மிகவும் அழகும், நல்ல அறிவும் நிரம்பிய பெண்ணாக தெரிந்ததால் அனைவரும் சம்மதித்தனர். நிச்சயிக்கப்பட்டபடியே கல்யாணம் நடந்தேறியது. மருதப்பன் தன்னிடம் உள்ள செல்வங்களை நல்ல முறையில் பண்படுத்தவும்,வளமான குடும்பமாக உருவாக்கவுமே மருமகள் தேவையேயொழிய வரதட்சணை கொண்டுவரும் வாகனமாக இருக்ககூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தன் உறுதியின்படியே சம்பந்தி வீட்டாரிடம் ஒரு பொட்டுபொடி கூட வாங்கவில்லை.
அதைப்போலவே அவர் மகளான லட்சுமியையும் ஒரு நல்ல வரன் தேடினார். அதே ஊரில் இருந்த மாரி என்னும் சொந்தக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தார். லட்சுமிக்கும் சிறிய அளவில் வீடு ஒன்று கட்டிக்கொடுத்தார்.

சந்தோஷத்திற்கு மேலாக சந்தோஷம் கிட்டும் விதமாக லட்சுமிக்கு ஒரு ஆண் குழந்தையும், கார்மேகத்திற்கு பெண் குழந்தையும் பிறந்தது.கார்மேகத்தின் பெண்குழந்தைக்கு மாதுரி என்றும் லட்சுமியின் ஆண்குழந்தைக்கு வசந்தன் எனவும் பெயர் வைத்தனர் நம் பெரியோர்கள்..

வசந்தனும், மாதுரியும் தன் ஊரிலே இருந்த பாலர் பள்ளியில் படிக்க வைத்தார் மருதப்பன். கிராமத்து வாசனையும், தாத்தா பாட்டியின் அன்பும் இரு செல்வங்களை நன்கு பதப்படுத்தியது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல் வேண்டும் , அடுத்தவருடன் நட்புடன் பழக வேண்டும் , யாருடனும் தேவையில்லாமல் சண்டை போடக்கூடாது என பல நல்ல செய்திகளை தன் பேரன், பேத்திக்கு அறிவுறுத்தியிருந்தார். குழந்தைகளும் தாத்தா பாட்டியின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தனர்.

வசிகரன் மேற்படிப்பு படிக்க பட்டணம் சென்றான். அங்கு ஏற்பட்ட ஆடம்பரக்காதலும், நட்பும் வசிகரனின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப்போகின்றது என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை. மருதப்பன் தன் பிள்ளை பட்டணத்தில் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காவே மாதாமாதம் பணம் அனுப்பிக்கொண்டே இருந்தார்.

பல்கலைகழகத்தில் சேர்ந்து படித்த நளினியிடம் தீராக்காதல் கொண்டான். நளினி குடும்பத்தைப்பற்றிச்சொல்ல வேண்டுமானால் மிகவும் கண்டிப்பான அதே சமயத்தில் ஒரு சமயம் கஷ்டப்பட்ட குடும்பம். ஆனால் நளினி தன்னால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என பலமுறை தன்னுள் புழுங்கியுள்ளாள். இதனால் தன் காதலனுடன் சந்தோசமாகவும் , ஆடம்பரமாகவும் சுற்றித்திரிந்தாள்.

மேற்படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தான். கையோடே காதலையும் கூட்டிகொண்டே திரிந்தான். இவர்களின் காதலை அறிந்த நளினியின் பெற்றோர் உடனே திருமணத்தை முடிக்க வேண்டும் என வசிகரனிடம் வற்புறுத்தினர். ஆனால் உடனே திருமணம் முடிக்க சம்மதமில்லை. இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் இப்படியே கழிக்கலாமே என தன் எண்ணத்தை பெற்றோரிடமும், வசிகரனிடமும் சொன்னாள்.

தங்கள் மகள் இவ்வாறு பொறுப்பற்று பேசுவதை நளினியின் பெற்றோர் வருந்தினர். எனவே வசிகரனிடம் “ நீ என் மகளை முறையாக திருமணம் செய்து கொண்ட பிறகே அவளை அழைத்துக்கொண்டு வெளியில் சுற்றலாம், அதுவரையில் நீங்கள் இருவரும் சந்திக்க அனுமதிக்க முடியாது” என உறுதியாகச்சொன்னார்கள்.

தன் அருமைக்காதலியின் பெற்றோர் கூறிய வார்த்தைகளை கேட்ட வசி..

தன் காதலியின் நினைவோடே ஊருக்கு அடுத்த வந்து தன் தாய் தந்தையரிடம் சண்டை போட்டான்

“அப்பா நீ எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைக்கனும்”. - இது வசியின் ஆக்ரோஷமான குரல்.

“ வசி ஆத்திரப்படாதேயப்பா.. உன் அம்மாளும் நானும் உனக்கு ஒரு கால் கட்டு போட்டுடணுமுன்னு பேசிகிட்டு இருந்தோம், தோதா நம்ம தரகர் தணிகாசலம் நேத்துக்காலையில வந்தார். நல்ல படிச்ச குடும்பத்துப்பொண்ணுகளுக்கு வரன் தேடிக்கிட்டு இருப்பதாகவும் சொன்னார். நம்ம வீட்டில கல்யாண வயசுல நீ இருக்கிறதால உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனுமுன்னு நாங்க சொன்னோம். அதற்கு அவர் சில படங்களை எடுத்துக்காட்டினார். அதுல நம்ம கண்ட மங்கலம் வாத்தியார் பொண்ணு ரெம்ப அழகா இருந்துச்சு.. நல்ல படிப்பும் படிச்சிருக்கு, நல்ல குடும்பப்பொண்ணுன்னு நம்ம தரகர் வேற சொன்னார். அதற்கு நானும் உன் அம்மாளும் பையனும் வரட்டும் போய் பார்த்துடலாமுன்னு சொல்லி அனுப்புனோம்.” என அமைதியாக மருதப்பன் எடுத்துரைத்தார்.

"ஆமாப்பா நல்ல குடும்பமுன்னு சொல்றாக.. நம்ம கலையரசிக்கு ஏற்கனவே அந்தப்புள்ளய தெரியுமாம். நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுன்னு சொல்லுச்சு, நாம போய் பார்த்துட்டு வந்துடலாம்பா” இது முத்தம்மாளின் பாசக்குரல்.

தன் காதலையும், அதன் பின்பு ஏற்பட்ட நிகழ்வுகளையும் சொல்ல வந்த வசிக்கு ஒரே குழப்பம். தன் காதலியின் காந்தமுகம் கண்ணிலாடவே தாய் தந்தையரை வெறுப்புடன் பார்த்தான்.

“ஏய் , கிழங்களா நான் என்ன உங்களை பொண்ணு பார்க்கவா சொன்னேன். என்ன கண்ட மங்கலம் வாத்தியார் மகளா ? இல்ல காணாத மங்கலம் போலீஸ் காரன் மகளா ? அவள நான் கட்டிகிட்டு உங்களோடே இந்தக் காட்டுல காலத்தை ஓட்டணுமா?” என சாமி வந்தவன் போல் கத்தினான்.

வசி தன் பெற்றோரை திட்டியுள்ளான் ஆனால் இது வரையிலும் தங்களை இவ்வளவு தரம் குறைய பேசியதே இல்லை என அதிர்ந்து போயிருந்தனர் இருவரும்.

அதே நேரத்தில் வயலுக்கு வேலைக்குப்போயிருந்த கார்மேகமும், கலையரசியும் ஒருவருக்குபின் ஒருவராக கையில் ஆளுக்கொரு பசுமாட்டை பிடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.பள்ளிக்கூடம் போய்விட்டு தெருவில் விளையாடப்போயிருந்த மாதுரியும் , வசந்தனும் வசி வந்திருப்பதைக்கேட்டு ஓடி வந்தனர்.

வசியின் குரல் கார்மேகத்தின் காதில் பட்டும்படாமலும் கேட்டு விட்டது.

“ அட நம்ம வசி ! எப்பப்பா வந்தே? நல்லாருக்கியா ? படிப்பெல்லாம் எப்படி போய்கிட்டுருக்கு? “ கேள்விகளாய் அடுக்கினார் கார்மேகம்.

“ வாங்க தம்பி ! இப்பத்தான் வந்தீங்களா? இருங்க குடிக்க காபி தாரேன்” இது பாசக்கார அண்ணி கலையரசி.

அதற்கு வசிகரன் “ காப்பியும் வேணாம் ஒன்னும் வேணாம்” என எரிந்து கொண்டே சொன்னான்.

”என்ன விசயமாய் இவ்வளவு கோபப்படுகிறாய்” என சாந்தமாய் கேட்டார் கார்மேகம்.

தான் வந்த செய்தியை சொல்ல ஆரம்பித்தான். தான் பட்டிணத்தில் ஒரு பெண்ணை உயிருக்குயிராக காதலிப்பதாகவும், அவளும் தன் மீது உயிராய் இருப்பதாகவும், தங்களின் காதலுக்கு அவளின் பெற்றோர் கொடுத்த சவுக்கடிச்செய்தியையும் சொன்னான்.

இதனைக்கேட்ட மருதப்பன் பட்டிணத்துப்பெண் நம் குடும்ப பாரம்பரியத்துக்கு அவ்வளவாக ஒத்துப்போக மாட்டாள், அவள் நகர வாழ்க்கை எனும் மோகத்தில் எங்களிடமிருந்து உன்னை பிரித்துச்சென்றால் எங்களால் தாங்கமுடியாது என புலம்பினார்.

இதனைக்கேட்ட வசி ஆத்திரத்தில் கத்தினான் . தான் அவளைத்தான் கட்டாயம் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், முடிந்தால் திருமனதிற்கு தாங்கள் இருவரும் வரலாம். இல்லையெனில் இங்கேயே இருந்து கொள்ளுங்கள் என சொன்னான்.

இதனைக்கேட்டு கார்மேகம் ஆத்திரமுற்றார். “ என்னடா ..பேச்சு ரெம்ப பெரிசா போகுது.. நாங்க வராம நீ கல்யாணம் பண்ற அளவுக்கு துணிச்சிட்டாயா ?” என கத்தினார்.

” நீங்க யாருமே இல்லாம என்னால கல்யாணம் கட்டிக்கிற முடியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறீர்களா? நீங்க யாருமே தேவையில்லை எனக்கு, நான் என் நளினியோடு சந்தோசமா இருக்கப்போறேன். நீங்களும் வேணாம், உங்க உறவுகளும் வேணாம்” என வெட்டி வீராப்புடன் மீண்டும் அடுத்த நாள் காலையில் பட்டணத்திற்கு கிளம்பிப்போனான்.

தன் கிராமத்தில் நடந்த செய்திகளை நளினியின் பெற்றோருக்கு எடுத்துரைத்தான். எல்லாவற்றையும் கேட்ட நளினியின் அப்பா ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு குறிப்பிட்ட நன்னாளில் திருமணம் முடித்து விட வேண்டியது தான் என வசியிடம் சொன்னார்.

தங்கள் திருமணம் எளிதாக நடைபெறக்கூடாது என்றும், பலவகை விருந்துகளுடன், ஆட்டம் பாட்டமாக உயர்தர நட்சத்திர விடுதியில் தான் நடக்க வேண்டும் என தன் ஆசைக்காதலனுக்கு வாஞ்சையோடு சொன்னாள். அவ்வாறே தன் பெற்றோரிடமும் எடுத்துரைத்தாள்.

தன் ஒரே மகளின் திருமணத்தை அவள் ஆசைப்பட்டபடியே நடத்திவிட வேண்டியது தான் என நளினியின் பெற்றோர் முடிவெடுத்து நாளும் குறித்தனர். நட்சத்திர விடுதியும் புக் செய்யப்பட்டது..

அன்று திருமணத்திற்கான பத்திரிக்கை அடித்து வந்தது. அதில் தான் கேட்டுக்கொண்டபடியே தன் பெற்றோர் பெயர், அவர்களின் சொந்த ஊரின் பெயர், உறவுக்காரர்களின் பெயர், என ஒரு வரியும் இடம் பெறாதது கண்டு மகிழ்ந்தான். ஆனால் நளினியின் அப்பாவிற்குத்தான் சின்ன வருத்தம்.

கல்யாணத்திற்கு வருபவர்கள் வசிகரனின் பெற்றோர் யார் எனக்கேட்டால் அவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்வது என்றும் அதனால் தங்களுக்கு பெருத்த அவமானமாய் போய் விடும் எனக்கருதி தாங்களே வசியுடன் கிராமத்திற்குச்சென்று அவர்களிடம் நிலைமையைச்சொல்லி வரவைப்பது என முடிவெடுத்தனர்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலையில் பேருந்து பிடித்து கிராமத்திற்கு புறப்படத் தொடங்கியவர்கள் மாலை 3 மணியளவில் வசியின் வீட்டை வந்தடைந்தனர்.அங்கே பெரியவர்கள் யாரும் வீட்டில் இல்லை அனைவரும் வயலில் வேலைக்குச்சென்றிருந்தனர். மருதப்பனின் பேரக்குழந்தகளுக்கு ஞாயிறு விடுமுறையாதலால் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர். வீட்டிற்கு இவர்கள் வந்ததும் இருவரும் தாத்தா பாட்டியைக்கூப்பிட இருவரும் வயலுக்கு ஓடிச்சென்றனர்.

“ தாத்தா, தாத்தா வசி சித்தப்பாவோட ரெண்டு விருந்தாடி நம்ம வீட்டுக்கு வந்திருக்காக.. சித்தப்பா உங்கள வீட்டுக்கு வரச்சொன்னாக” இது மாதுரியின் குரல்.

எல்லோரும் வேலையை வேகவேகமாக ,அரைகுறையாக முடித்துவிட்டு வீட்டிற்குத்திரும்பினர். வந்திருந்த பெரியவர்களை வரவேற்றார்கள் மருதப்பனும் முத்தம்மாளும். கலையரசியும் தன் பங்கிற்கு வாங்க என சொல்லிவிட்டு அடுப்பில் உலையை வைத்தாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலே கார்மேகமும் வீடு வந்து சேர்ந்தான். வசியின் பிடிவாதத்தால் தங்களால் திருமண பத்திரிக்கையில் யாருடைய பெயரும் அச்சிடவில்லை என்றும், நிச்சயதார்த்ததிற்கு கூட அழைக்க வில்லை என தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொன்னனர். இவர்களின் பேச்சைக்கேட்டு மருதப்பன் அதிர்ந்து போய் விட்டார். ஆனால் கார்மேகம் ஒரு வித எண்ணத்தோடே ஏளனச்சிரிப்பு சிரித்தார்.

காதில் கேட்டபடியே முத்தம்மாளும், கலையரசியும் சாப்பாடு சமைத்து முடித்தனர். சாப்பிட வருமாறு அனைவரையும் அழைத்தனர். இறுதியாக மருதப்பனும், கார்மேகமும் தாங்கள் அப்புறம் சாப்பிட்டுக்கொள்வதாகவும், முதலில் வந்த விருந்தாளிகளுக்கு உணவு கொடுக்குமாறு கலையரசியிடம் சொன்னார்கள். நளினியின் பெற்றோருடன், வசியும் சாப்பிட அமர்ந்தான். நளினியின் பெற்றோர் கலையரசியின் கை பக்குவததை மெச்சிக்கொண்டே சாப்பிட்டனர்.

மருதப்பனும், கார்மேகமும் இதனைப்பற்றிய சிந்தனையில் இறங்கினர். ”லட்சுமியையும் வரச்சொல்லு; அவள் தன் பங்கிற்கு என்ன சொல்றான்னு பார்ப்போம்” என மருதப்பன் கார்மேகத்திடம் சொன்னார்.

அங்கே லட்சுமியும் வந்து சேர்ந்தார்.

இதற்கிடையில் சாப்பிட்டு முடித்த நளினியின் பெற்றோர் கிராமத்தில் இருக்கும் வசியின் வயல்கள், தோட்டம் ஆகியவற்றையும், அங்குள்ள கோயில்களையும் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டனர். அவர்களோடே வசியும் சுற்றிக்காட்ட சென்றான். லட்சுமி வீட்டிற்கு வந்து அங்கு நடந்தவைகளை கேட்டறிந்து கொண்டார். என்ன செய்யலாம் என அனைவரும் ஒன்று கூடி ஆழ்ந்த ஆலோசனையில் இறங்கினார்கள்.

”இதில் யோசனை பண்ண என்ன இருக்கு? நம்மள மதிக்கல, நாம அங்க போனா அவமானப்படுத்தான் வரணும், அதனால நான் சொல்றேன் யாரும் போக வேண்டாம்” என கார்மேகம் சொன்னார்.

“நம்ம யாரும் அங்க போகலைனா நம்ம புள்ளைக்கு அங்க சொந்தமுன்னு சொல்ல யாருமே இருக்க மாட்டாங்க. அதனால நாம எல்லோரும் போயிட்டு வரலாம்” இது கலையரசியின் குரல்.

கலையரசியின் குரலை மருதப்பனும், முத்தம்மாளும் கோரஸாக ஆதரித்தனர். ஆனால் தன் பிடியை விடாமல் பேசினார் கார்மேகம்.

“ சரி அண்ணே ! எனக்கோ கல்யாணத்துக்குப்போக மனசில்லை, நீனும் போக மாட்டேன்னு அடம்பிடிக்கிறீக.. அப்பா , அம்மா மட்டும் போயிட்டு வரட்டும்” என நாட்டாமை போல தீர்ப்பு சொன்னார் நம் லட்சுமி. இது நல்ல முடிவு என அனைவரும் ஒரு சேர ஆதரித்தனர்.

சுற்றிப்பார்க்க போனவர்கள் பொழுதிருட்டும் போது திரும்பி வந்தனர். வந்தவர்கள் பயணக்களைப்பாக இருந்ததால் விரைவிலே தூங்க புறப்பட்டனர். காலையில் பட்டணம் செல்ல வேண்டும் எனச் சொன்னார்கள்.அவர்கள் படுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டு முத்தம்மாள் வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்தார்.

பின்னர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டுவிட்டு படுக்கச்சென்று விட்டனர். மறு நாள் காலையில் மருதப்பன், நளினியின் அப்பாவிடம் வயலில் கொஞ்சம் முக்கியமான வேலை இருப்பதால் அனைவரும் வர இயலாது எனவும், யாரேனும் இருவர் வருவார்கள் என சொன்னார், சரி யென சொல்லிவிட்டு அனைவரும் சென்றனர்.

குறித்த நாளில் திருமணம் வெகு ஆடம்பரமாய் நடக்க ஆரம்பித்தது. மருதப்பனும், முத்தம்மாளும் மட்டுமே திருமணத்திற்குச்சென்றிருந்தனர்.அவர்களுக்கு நடக்கும் ஆடம்பர நிகழ்ச்சியை பார்க்க பார்க்க வீட்டிற்கு வந்த வழியே ஓடிப்போய் விடலாம் எனத்தோன்றியது. ஆனால் மாப்பிள்ளை நம் பிள்ளையாயிற்றே என பொறுமைகாட்டி வந்தனர்.

திருமணம் முடிந்து நட்சத்திர விடுதியில் இரவில் விதவிதமான உணவுகள் ப‌ரிமாறப்பட்டன.ஆட்டபாட்டங்களும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது. தங்களுக்கு இந்த மாதிரியான உணவுகள் பிடிக்காது என சொல்லி விட்டு இரவுப்பொழுதை இருவரும் பட்டினியாகவே கழித்தனர். இவர்களின் இந்தபாங்கு குறித்து நளினி வசியின் காதில் “ உங்க அப்பா,அம்மா சரியான பட்டிக்காடுகள், இங்கிதம் தெரியாதவர்கள் “ என முணுமுணுத்தாள்.

அடுத்த நாள் தாங்கள் ஊருக்கு கிளம்ப வேண்டும் என இருவரும் கிளம்பிவிட்டனர். கிளம்பும் போது வசியிடம் “ தம்பி ..ரெம்ப செலவு செய்து கல்யாணம் நடத்திருப்ப போல தெரியுது. அண்ணன் குடும்பமோ , அக்கா குடும்பமோ வரலைன்னு கோபபடாதே.. கையில செலவுக்கு காசு இருக்கா? ஊருக்கு போயி ஏதாச்சும் அனுப்பி வைக்கவா ?”என மருதப்பன் தன் மகனிடம் கேட்டார்,

அதற்கு வசி “ நீ கொடுக்கிற காச வச்சு இங்கு புண்ணாக்கு வாங்கவா? நீஙக இருவரும் இங்க வந்ததே ரெம்ப அவமானமா நெனக்கிறேன். இதுல அக்காவாம், அண்ணனாம்” என வசி அலட்சியமாய் பதிலளித்தான்.
வசியும் தன் மாமனார் வீட்டில் ஒரு வார காலம் தங்கினான். கல்யாணச்செலவுகளை பொறுத்தவரை தன் பெற்றோரிடம் கேட்டால் தன்னை மதிக்க மாட்டர்கள் என்ற தேவையில்லாத வரட்டு கவுரத்தோடே வெளியில் 10 வட்டிக்கு கடன் வாங்கித்தான் செய்திருந்தான்.

மாமனார் வீடும் நடுத்தரக்குடும்பத்தைச்சேர்ந்தவர்களே. அவர்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணம், நகை என அனைத்தும் நளினியின் திருமணத்திற்கே செலவழித்தனர்.

நளினி வெளியே தனியே வீடு வாடகைக்கு எடுத்து தங்கலாம் என்று வசியிடம் சொன்னாள். வசியும் அதுவும் சரியென்று தனியேஒரு ப்ளாட்டில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்தனர். வீட்டையும் தன்னையும் அலங்கரிக்கத்தொடங்கி விட்டாள். வசி திருமணத்திற்கென வாங்கிய கடனோடு கூடுதலாக கடன் சேர்ந்தது.

தன் ஆசைக்காதலிக்கு ஆசைப்பட்ட பொருட்களை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் நளினியின் அளவுக்கு மீறிய ஆசைகளை அவனால் வெளியில் சொல்ல முடியவில்லை. தான் வேலை பார்த்த நிறுவனத்தில் தான் புதியவர் என்றபடியாலும் , அனுபவம் குறைவு என்ற காரணத்தாலும் பதவி உயர்வு கிட்டாமல் அதே சம்பளத்தில் வேலையைத்தொடர்ந்து கொண்டிருந்தான்.

இழுத்துப்பிடித்து இவர்களின் வாழ்க்கைச்சக்கரம் சுழன்று கொண்டிருந்தது.. ஒரு வருடம் கழித்து வசிக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்தது. எல்லையில்லா மகிழ்வு இருவருக்குமே.. வசி மாமனார் வீட்டில் நளினியை பிரசவத்திற்காக விட்டிருந்தான், அவர்களும் பேரன் பிறந்த செய்தியை மருதப்பன் தம்பதியருக்கு தெரிவித்தனர். தங்கள் பேரப்பிள்ளையை காண வேண்டும் என்னும் ஆவலில் மருதப்பனும்- முத்தம்மாளும் பட்டணம் வந்திருந்தனர். அலுவலகம் முடிந்து விட்டு நேராக நளினியை பார்க்க வந்த வசி தன் பெற்றோரைக்கண்டு ஆத்திரமுற்றான்.

“ இவர்களை யாரு இங்க வரச்சொன்னது? நான் என்ன இவுகளை கூப்பிட்டேனா? எங்கே என்ன நடக்குதுன்னு மோப்பம் புடிக்கிறதே வேலையா போச்சு இந்த கிழங்களுக்கு” என எரிச்சலோடே மாமனாரிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

அதனைக்கேட்ட மாமனார் தானே அவர்களுக்கு செய்தியை தெரிவித்து வரச்சொன்னதாகச்சொன்னார். இதனைக்கேட்ட வசி ஓரளவு கூலானான். சிறிது நேரத்திற்குப்பின் மருதப்பனும், முத்தம்மாளும் தங்களின் கிராமத்திற்கு கிளம்பிச்சென்றனர்.

எளிமையாய் தான் நளினியின் வளைகாப்பு வைபவம் நடந்தது. அதனால் பெயர் சூட்டும் விழா வெகு விமரிசையாக நடக்க வேண்டும் என அடம்பிடித்தாள். நளினியின் விருப்பம் போலே ஒரு நன்னாளில் பெயர் சூட்டும் விழா நிகழ்ந்தது. மயூரப்பிரியன் என்ற அழகான பெயரை குழந்தைக்கு வைத்தனர்.

நளினி தன் கணவனிடம் “ நம் வீட்டிற்கு போய் விடுவோம்” எனக்கூறினாள். அதன் படியே அடுத்த இரு நாட்கள் கழித்து வீட்டிற்குச்சென்றனர்.

குழந்தையை வைத்துக்கொண்டு தன்னால் வீட்டு வேலைகளை பார்க்க முடியாது எனவும் ஒரு வேலைக்காரி வேண்டும் எனவும் வசியிடம் சொன்னாள். சொன்னபடியே ஒரு வேலைக்காரியும் பணிக்கு அமர்த்தப்பட்டாள். நாட்கள் செல்லச்செல்ல வேலைக்காரியை நிரந்தரமாக தங்கள் வீட்டிலே வேலை செய்ய வைப்பது என இருவரும் முடிவெடுத்தனர். நளினி தனக்கு வேலைகள் குறைந்து தற்போது தான் தேவையான ஓய்வு கிடைத்துள்ளதாக எண்ணிக்கொண்டாள். இப்போதெல்லாம் நளினிக்கு தற்போது அடுத்த வீட்டு, எதிர் வீட்டுபெண்களுடன் அரட்டை அடிப்பது, அவர்களுடன் கடைகளுக்குச்செல்வது, சினிமாவிற்குச்செல்வது போன்ற வேலைகளே ஆகும். குழந்தை கூட தற்போது வேலைக்காரியின் பராமரிப்பில் தான் அதிக நேரம் இருக்கின்றது.

ஒரு நாள் இரவு சாப்பிடும் பொழுது வசியிடம் “ என்னங்க.. நான் ஒன்று சொல்லட்டுமா?” எனக்கேட்டாள்.

அதற்கு வசி “ என்ன . சொல்லு” என்றான்.

“ எத்தனை நாளைக்குத்தான் நாம் இப்படியே கஷ்டப்பட்டு கொண்டிருப்பது, உங்களுக்கும் ப்ரமோஷன் ஆன பாடில்லை, பேசாம நாமகவே ஒரு தொழில் தொடங்கலாம் தானே “ என தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்.

“என்ன.. நம்ம தொழில் தொடங்குறதா? அதுக்கு பணம் வேணுமே.. எங்கே போய் வாங்குறது? ஏற்கனவே வாங்கிய கடனுக்கு இன்னும் வட்டி கட்டி தீர்ந்த பாடில்லை, இனிமேல் நம்மளை நம்பி கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கா என்ன?” இது வசியின் குரல்.


அதற்கு நளினி “ உங்களுத்தான் கிராமத்துல சொத்துக்கள் இருக்குதுன்னு சொன்னீர்களே , அதில உங்க பங்க வாங்கி விற்று நாம் தொழில் தொடங்கலாமே”

“ அதுவும் நல்ல ஐடியாவாகத்தான் தெரிகின்றது, சரி நாம என்ன தொழில் தொடங்கலாம்?” என வசி கேட்டான்.
அதற்கு ஜுஸ் கம்பெனி தொடங்கலாம் என்றாள். “ எனக்கு அந்த துறையில் A,B,C,D யே தெரியாதே. எப்படி தொடங்குவது ?”என்றான்.

"நாம் படும் கஷ்டத்தைப்பார்த்து எதிர்வீட்டு அக்கா தன் தம்பியைப்பற்றியும்,அந்தத்துறையில் நன்கு கைதேர்ந்தவன் என்றும் அவன் தற்போது பிரபல கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். நாம் அவனின் உதவியைக்கேட்டால் நிச்சயம் செய்வான் எனவும் சொன்னார்கள்” இது நளினியின் விளக்கம்.

ஒரு நாள் தன் கிராமத்திற்குச்சென்று தன் பங்கை பிரித்துதர வேண்டும் என தந்தையிடம் சண்டை போட்டான் வசி.இதற்கு மருதப்பன் சம்மதிக்க வில்லை. பெரும் பஞ்சாயத்தே நடந்தேறி விட்டது. அதன் பின்பு தன் சொத்துக்களை மூன்று பங்காக பிரித்து அதனில் ஒரு பங்கை வசிக்குக்கொடுத்தனர். வசி தன் நிலங்களை விற்கப்போவதாக அப்பொழுதே அறிவித்தான். அறிவித்த படியே அந்த இடங்களை அந்த ஊரில் இருந்த ஒரு பணக்காரருக்கு விற்று பணத்தோடு பட்டணம் வந்தான்.

பட்டணம் வந்து தன் வேலை பார்த்த நிறுவனத்தில் வேலையை விட்டு விலகிகொள்வதாக கடிதம் அளித்தான். இதனையறிந்த கடன் காரர்கள் வசியை பணத்தைக்கேட்டு நெருக்கினார்கள். தான் புதிய தொழில் தொடங்கப்போவதாகவும் அதில் கிடைக்கும் லாபத்தைக்கொண்டு இன்னும் இரண்டு மாதத்தில் தங்களிடம் வாங்கிய கடனை அடைத்துவிடுவேன் என்று உறுதியளித்தான்.

அடுத்த வீட்டு அக்காளின் தம்பியான ஆனந்தைக்கொண்டு புதிதாக தொழிற்சாலையை அமைத்தான், அவன் சொன்னபடியெல்லாம் வசி ஆடும் பொம்மையாய் மாறி விட்டான். நளினியின் ஆசைப்படியே புதுக்காரும் வாங்கப்பட்டது. நகைகளும் வாங்கப்பட்டது. தொழிற்சாலையில் நல்ல முறையில் தொழில் போய்க்கொண்டு இருந்தது.

இடையில் ஒரு நாள் ஆனந்த் தமக்கு இங்கு சம்பளம் வேண்டாம். பங்கு தான் வேண்டும், அதிலும் சமபாதியான பங்கு வேண்டும் என வாதிட்டான். தான் இல்லாவிடில் ஒன்றும் அசையாது எனவும் பெருமைபட எடுத்துரைத்தான். ஆனந்த் அனைத்து தொழிலாளர்களிடமும், வியாபாரிகளிடமும், நல்ல ஒரு தொடர்பை வைத்திருந்தான்.

வசிக்கு காலம் மாற்றி சுற்ற ஆரம்பித்து விட்டது. ஆனந்தின் செய்தியை அப்படியே நளினியிடம் தெரிவித்தான். அதற்கு நளினி “இவன் போனால் என்ன? நமக்கு இவனைப்போல் ஆயிரம் பேர் பணத்தை அள்ளி வீசினால் கிடைக்கக்கூடும்” என பெருமாப்புடன் பேசினாள்.

நளினியின் சொற்படி ஆனந்தை வேலையை விட்டு நீக்கினான். ஆனந்தோடே சில முக்கிய அதிகாரிகளும் வேலையை விட்டு நின்று கொள்வதாக அறிவித்தனர். அடுத்து புதிதாக தொழில் நுட்ப வல்லுனர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்., அவருக்கு இந்ததுறையில் அனுபவம் மிகக்குறைவு. இருந்தாலும் வேலைக்கு ஆட்கள் வேண்டுமே என்ற காரணத்திற்காகவே அமர்த்தப்பட்டனர்.

நாட்கள் செல்லசெல்ல ருசி குறைந்து கொண்டே சென்றது. சந்தையில் நல்ல விளம்பரத்தோடு இருந்த இவர்களின் ஜூஸ் மதிப்பிழந்தது.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது, கடன்காரர்கள் மறுபடியும் கழுத்தை பிடிக்க வந்தனர். வேறு வழியில்லாமல் ஆனந்திடமே அடிமாட்டு விலைக்கு தம் தொழிற்சாலையை விற்று விட்டான். பெரும் போராட்டத்திற்குப்பின் நளினியின் நகைகளையும் விற்க நேர்ந்தது. காரும் அதற்குரிய தவணையை முழுதாக கட்டாததால் ஏலத்தில் சென்று விட்டது. ஒருவழியாக முக்கால் வாசி கடன்களை அடைத்து விட்டான்.

ஏறக்குறைய அன்றாடங்காய்ச்சிகளின் நிலைக்கு வந்து விட்ட வசி... தாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் போனதால் அந்த வீட்டையும் காலி செய்து விட்டு அதனை விட வசிதியில் குறைந்த வீட்டை வாடகைக்கு அமர்த்தினர். அவனால் மற்ற வேலைகள் செய்யத்தெரியாததால் அலுவலக வேலைக்காக அலைந்து ஓய்ந்து போனான். வீட்டில் இருந்த பொருட்களும் ஒவ்வொன்றாய் விற்று பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தனர்.

நளினிக்கு தற்போது சிந்தனையில் தான் செய்த ஆடம்பரமும், அலட்சிய போக்குமே தங்கள் நிலைக்கு காரணம் என்பதை உணர்ந்தாள். வேறு வழியில்லாமல் தாங்கள் கிராமத்திற்கு செல்வதென முடிவெடுத்தனர்.எல்லாம் இழந்து வெறும் ஆட்களாய் தன் மகன் மயூரப்பிரியனோடு மதியப்பசியோடும் கிராமத்திற்குச்சென்றனர். கிராமத்தில் இவர்களைக்கண்டதும் கார்மேகம் என்ன நடந்தது எனக்கேட்காமல் பாராமுகமாய் தன் வேலையைப்பார்க்க சென்று விட்டார். மருதப்பன் காலையிலே வயலுக்குச்சென்று விட்டார். வீட்டில் இருந்த கலையரசியும், முத்தம்மாளும் வந்தவர்களை உள்ளே வரச்சொன்னார்கள்.

சிறிது நேரத்திலே லட்சுமியும் ஆங்கே வந்தாள். வசி தன் மனைவியோடு வீட்டிற்கு வந்திருப்பதை கார்மேகம் தன் அப்பாவிடம் சொன்னார். இதனைக்கேட்டு மருதப்பன் கார்மேகத்தோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.


நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கேட்டு விட்டு அமைதியாய் மருதப்பன் “ நாங்களெல்லாம் வேண்டாம் என நீ சென்றாய், இன்று நீ எல்லாத்தையும் இழந்து விட்டு வந்து நிற்கின்றாய், பணம் தானே போச்சு, அதனாலென்ன மறுபடியும் சம்பாதித்து விட வேண்டியது தானே” என்றார்.


அதற்கு வசி தான் நடந்து கொண்டதையெல்லாம் மறந்து மன்னிக்க கோரினான். அனைவரிடம் அழாத குறையாய் வேண்டி நின்றான்.
அதற்கு மருதப்பன் “ நீ என் பிள்ளை , என்ன செய்து விட்டு நீ வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வது தான் பெற்றவர்களின் பாசம் என்றாலும் உன்னை வா என்றழைக்க எங்களில் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இல்லை. இங்கு ஏன் இல்லை என்ற கேள்வியையும் உன்னால் எழுப்ப முடியாது, உங்களுக்கெல்லாம் பாகப்பிரித்தபின்பு எங்களுக்கென்று ஒரு தோட்டமும், 4 வயல்களும் வாங்கினோம்.அதில் அனைவரின் பங்களிப்பும், உழைப்பும் உள்ளது. இருப்பினும் அந்த இடத்தை உனக்குத்தருகின்றேன், முடிந்தால் பிழைத்துக்கொள் “ என சொன்னார்.


கார்மேகமும் தன் பங்கிற்கு சரியென ஒத்துக்கொண்டார். இறுதியில் அந்த தோட்டத்தில் வசி தன் நளினியோடும் , மயூரப்பிரியனோடும் அங்கு தங்கினான்.

தனக்கு தெரிந்த வேலைகளை செய்ய ஆரம்பித்தான், கிராமத்து வாசனையில் அவன் வளர்ந்திருந்ததால் அவனால் எளிதாக வேலை செய்ய முடிந்தது. ஆனால் நளினிக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக தெரிந்தாலும் படிப்படியாக கற்றுக்கொண்டாள்.

ஒரு நாள் வெளிமுற்றத்தில் இருந்த கயிற்றுக்கட்டிலை சரிசெய்து கொண்டு அதனில் படுத்து வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டே இருந்தான். வானத்தில் முழு நிலவு சுடர் வீசிக்கொண்டிருந்தது. நளினி அருகே அமர்ந்து “ என்னங்க .. அப்படியே பார்த்துக்கிட்டு இருக்கீக.. ” என்றாள்.


தன் நிலைக்குத்திரும்பிய வசிகரன் “ நான் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கின்றேன்.. கூடவே திருப்பியும் பார்க்கின்றேன். இனியாவது திருத்தப்பார்க்கின்றேன்” என அடுக்கு மொழியிலே அடுக்கினான்.


முற்றியது....


நன்றி
:salute: :salute: :salute:



உயிரோவியம்

உயிரோவியம் ~ சிவஹரி


வசந்தன் இன்று நல்ல நிலைமையில் இருக்கின்றான் என்றால் அதற்கு வடிவு செய்த தியாகமே காரணம் என்று ஊரார் அரசல் புரசலாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால் தான் எதுவுமே செய்யவில்லை என்றும் “பெற்றால் தான் தன் பிள்ளையா? ” என்று மறுமொழி சொல்லிக் கொண்டும் சிரித்துக் கொண்டே சென்று விடுவார் வடிவாகிய வடிவுக்கரசியாக அம்மாள்.

வசந்தனின் தாயார் கமலாம்பாள் கொள்ளை அழகும், குறிப்பறிந்து நடக்கும் குணமும், ஈகை செரிந்த கையினையும் தன்னகத்தே கொண்டவர். இல்லையென வந்தோர்க்கு 'இது போதுமே' என்று சொல்லும் அளவிற்கு தன் சக்திக்கு அப்பாற்பட்டும் செய்ய முற்படுவர். தனது பள்ளிப்பருவத்திலிருந்தே அவருக்கு இந்த நற்சிந்தனை ஆசிரியர்களின் மூலமாக அவர் மனதில் வித்திடப்பட்டது.

கமலாம்பாளின் பெற்றோரும் செல்வச் செழிப்பு நிறைந்தவர்கள். அவர்களின் சொத்துக்களில் எல்லாம் வியர்வை சிந்திய தொழிலாளர்களின் புன்னகையும், மகிழ்ச்சியுமே கண்ணாடிப் பிம்பங்களாகப் பிரதிபலிக்கும். பெற்றோருக்கு ஏற்ற மகளாய் அதுவும் ஒற்றைத் தன்னிறைச் செல்வியாய் கமலாம்பாள் பிறந்து வளர்ந்து வந்தார்.

அகவை பதினைந்தை எட்டும் வேளையிலே பள்ளிப் படிப்பை நிறுத்தி விட பெற்றோர் முடிவு செய்தனர். பள்ளி ஆசிரியர்கள் எவ்வளவோ மன்றாடிக் கேட்டுக் கொண்டும் “ பொட்டப் புள்ள படிச்சு வேலைக்குப் போய் சம்பாதிச்சு தான் நாங்க சாப்புடணுமா” என்று அங்கே நாப்பிறழும் வகையிலே நாராயணின் விதி நாடகமாடி விட்டது.

தாயை சிறு வயதிலே இழந்து நின்றாலும் தாய்க்குத்தாயாய், தந்தைக்குத் தந்தையாய் நிற்கும் தனது அப்பா எது செய்தாலும் அது தனது நன்மைக்கே என்று எண்ணிக் கொள்ளும் கமலாம்பாளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு சிறு வயதிலேயே திருமணத்தை அவரின் பெற்றோர் கட்டாயத்தின் பேரில் மேலக்குறிச்சி ஜமீன்தார் ராமசாமிக்கு முடித்து வைத்தனர்.

ஜமீன்தார் ராமசாமியோ வேலைக்காரர்களின் அழுகையிலும், மனக்குமுறலிலும் சொத்து சேர்த்தவர். அத்தோடன்றி வெளிநாட்டுக்கு மரங்களை கள்ளச் சந்தையில் ஏற்றுமதி செய்து சொத்துச் சேர்த்தார்.

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது பழமொழி! ஆனால் ராமசாமி எல்லாமே ஐந்தே ஐந்து நாள் தான்.

பணத்தாசை என்னும் பேயின் மடியில் சிக்கிக் கொண்ட ராமசாமிக்கு தன் மனைவியின் அழகையோ அறிவையோ குணத்தையோ ரசிக்க நேரமில்லை. வியாபாரம் வியாபாரம் என்று முழு மூச்சாய் பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிப்பது குறித்தே நினைவலைகளை மாற்றி மாற்றிக் கொண்டே இருந்தார்.


கமலாம்பாள் தன் குடும்ப வாழ்க்கை நன்றாகவே நடந்து கொண்டிருக்கின்றது என்று வெளியிலேயும் பெற்றோருக்கும் தெரியும்படி அழகாய் வாழ்க்கையினை நடத்திக் கொண்டிருந்தார். இல்லையென்று வருவோர்க்கு இயன்ற வரை கொடுக்க தன் சேமிப்பையும், தந்தை இறப்பிற்குப் பின் தந்தை வழியாய் தனக்குக் கிடைத்த சொத்தினையும் ஈந்து கொண்டிருந்தார்.

கைக்கு வந்த சொத்துக்கள் எல்லாம் இப்படி தர்மசாலையில் இருந்து வெளிப்பட்ட பொரி உருண்டை போல இருக்கும் இடம் தெரியாமல் போகுதே என்ற ஆவேசத்திலும், அற்ப ஆசையிலும் "யாருக்கும் என்னைக் கேட்காமல் ஒரு சல்லிக் காசு கூட கொடுக்கக் கூடாது” என்றும் கமலாம்பாளின் சொத்துக்களையும் எழுதி வாங்கிக் கொண்டார் ராமசாமி.

நாட்கள் மாதங்களாக ஓடியது. மாதங்களும் ஆண்டுகளாக நகர்ந்து சென்றது. ஏதேனும் விசேசம் உண்டா என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருந்தார் கமலாம்பாள்.

ஐந்தே ஐந்து நாள் மட்டும் மனைவியென்னும் மகத்தான உறவை ரசித்த ராமசாமிக்கு மன ஓய்வு மட்டுமல்ல உடலுக்கும் ஒய்வும், உற்சாகமும் தரும் ஒரு இயந்திரமாக அவ்வப்போது கமலாம்பாள் தெரிந்தார்.

அது இறைவனின் கொடையே என்று அகமகிழ்வினைக் கூட்டிட அழகான கருவொன்று கமலாம்பாளின் வயிற்றில் குடி கொண்டது.!

ஒரு நாள் கரு உருவாகி கனிந்து வரும் வேளையிலே காலச்சனியென உள்ளே வந்தான் ஜோசியனொருவன்.

“ உங்க ரெண்டு பேரு ராசியினையும், நட்சத்திரத்தினையும், இன்ன பிற கணக்குகளையும் வைத்துக் கணிக்கும் போது பெண் குழந்தை தான்” என்று அடித்துச் சொல்லி ராமசாமியின் நெஞ்சில் இடியைப் பாய்ச்சி விட்டான்.

பெண் குழந்தை பிறந்தால் தனது சொத்தினை முழுசாக அடுத்தவனுக்கு கொடுக்க வேண்டுமே.! “பொட்டப் புள்ள பொறந்த செலவு அதிகமா இருக்குமே” என்ற எண்ணமே அவரிடத்தில் அதிமாய் உலவிச் சென்றது.

குழம்பிக் கொண்டு யோசித்தால் கொடூர எண்ணமே மேல் வந்து நிற்கும் என்பது போல ராமசாமிக்கும் ஒரு எண்ணம் உதித்தது. அதன் விளைவாய் கமலாம்பாளை தன் புதிதாக வாங்கிட பண்ணை வீட்டில் ஒரு ஓட்டு வீடு போட்டு அங்கே தங்க வைப்பது என்றும், பிறக்கும் குழந்தை பெண் குழந்தை என்று ஜோசியன் சொன்ன முடிவான வாக்கினைக் கொண்டும் கமலாம்பாளை சரியாகக் கவனிக்காமல் மாட்டுத் தொழுவத்தினை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வது முதல் மாடுகளுக்கு தீனி வைப்பது வரை எல்லா வேளைகளையும் செய்யச் சொல்லி துன்புறுத்தினார் ராமசாமி. ஒத்தாசையாக வடிவுக்கரசி என்ற அந்த கிராமத்தில் இருந்த ஒரு பெண்ணையும் குறைவான சம்பளத்தில் வேலைக்கு வைத்தார்.

ஆனால் கமலாம்பாளோ தன் கணவன் எது செய்தாலும் தன் நன்மைக்கே என்று எண்ணிக் கொண்டே வாழ்க்கையினை நடத்திச் சென்றார். மனம் தான் என்றுமே இருப்புக் கொள்ளாதே! நடந்த சம்பவங்களை மேலோட்டமாக வடிவிடம் ஒரு நாள் இரவில் நிலவொளியில் காய்ந்தபடி வீட்டு முற்றத்தில் அந்திப் பொழுது தெளித்த நீரின் மணத்தினை உள்வாங்கிக் கொண்டே கூறினார். ஆரம்ப காலத்தில் வாரம் இரு முறை வந்து பார்த்துச் சென்ற ராமசாமி போகப் போக மாதம் ஒரு முறை மட்டுமே வந்தார். கடைசியாக அந்த வரத்தும் வைகைத்தண்ணீர் வராத ராமநாதபுரம் போல காய்ந்து விட்டது.

கமலாம்பாளுக்கு மனதில் இப்போது பயம் குடி கொண்டு விட்டது. எங்கே தனக்குப் பெண் குழந்தை பிறந்தால் தன்னையும், தன் குழந்தையும் அழித்து விடுவாரோ என்று தாய்மை யோசிக்க ஆரம்பித்து விட்டது. தனக்கு எது நேர்ந்தாலும் கவலையில்லை. ஆனால் தன் குழந்தைக்கு எதுவுமே நேரக்கூடாது என்று வேண்டாத தெய்வமில்லாமல் எல்லாச் சாமியின் பெயரையும் தினமும் சொல்லிப் புலம்பினார்.

பண்ணையில் இருந்த மாடுகளும் எண்ணிக்கையில் ஒவ்வொன்றாய் குறைய ஆரம்பித்தது. மாடுகளைப் பிடிக்க வந்த ஆட்களிடம் கேட்கும் போது “ ஐயா, மாட்டை விற்று விட்டார்” என்று சொல்லிப் பிடித்துச் சென்றனர். வருமானத்திற்கும் வழியில்லை. எப்போதாவது கொடுக்கும் பணத்திற்காக வடிவு சென்று பலமுறை இரந்து நின்று வாங்கி வருவார்.


மாதம் எட்டைத் தொடும் வேளையிலே வடிவினைக் கூப்பிட்டு கமலாம்பாள், ”முதலாளியிடம் சொல்லி விட்டு இன்றுடன் நீ வேலையினை விட்டு நின்று கொள், நானே சமாளித்துக்கொள்கிறேன், அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் நீ வந்து பார்த்துக்கொண்டாலே போதும். இனிமேலும் எனக்கு என் பிள்ளையினைக் காப்பேன் என்று நம்பிக்கையில்லை. ஆகவே எந்தக் குழந்தை பிறந்தாலும் அதனை என் கணவரிடம் காட்ட வேண்டாம்; சொல்லவும் வேண்டாம். அதனை நீயே வளர்த்து ஆளாக்கி விடு. என் தந்தை எனக்காக விட்டுச் சென்றது என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவுமே இல்லையென்றாலும் மக்களிடம் நல்ல இரக்க மனமுடையவர் என்ற பெயர் மட்டுமே எங்களுக்கு மிஞ்சி இருக்கின்றது. அதே பெயரினை நீ என் பிள்ளையும் எடுக்கும்படி மட்டும் வளர்த்து விடு" என்று அழுது புலம்பி கேட்டுக் கொண்டார்.


வடிவுக்கரசியின் குடும்பம் ஊர் விட்டு ஊர் வந்து ஒரு வாய்க்கஞ்சிக்கூட வழியின்றி கையேந்திய நிலையில் கமலாம்பாள் என்றோ செய்த சிற்றுதவியால் வடிவுக்கரசியின் குடும்பம் இன்று தலை தூக்கி நிற்கின்றது. தன் குடும்பத்தினை ஆதரித்தவர் இன்று நம்மிடமே பிச்சை கேட்பது போல நிற்பதைக் கண்ட வடிவுக்கரசிக்கு நெஞ்சில் யாரோ உலக்கை கொண்டு இடித்த்து போல் உணர்ந்தார்.

“அம்மா, இன்று நாங்கள் இருக்கின்றோம் என்றால் அது அன்று நீங்கள் போட்ட பிச்சை தான்.! உங்கள் சொற்படியே நான் நடந்து கொள்வேன்” என்று வடிவு வாக்களித்தார்.

மாதம் உருண்டோடியது, அழகான ஆண்மகவினை பெற்றெடுத்தார் தாய் கமலாம்பாள். இனியாவது எங்கள் தலைமுறையில் தொடர்ந்து வசந்தம் வீசட்டும் என்றே வசந்தன் என்று பெயர் சூட்டி வடிவின் கையில் கர்ணன் கொண்ட தான தர்மத்தின் பலனை கண்ணனிடம் கொடுத்து போல ஈந்தார்.

சரியாக கவனிக்காமல் குடற் பகுதியில் சீழ் ஏற்பட்டு பரிதாபமாக கமலாம்பாள் இறைவனடி சேர்ந்து விட்டார். பெண் குழந்தை இறந்தே பிறந்தது என்று கமலாம்பாளின் பொய்யான தகவலையும், கமலாம்பாள் இறந்த தகவலையும் ராமசாமிக்குத் தெரிவித்தும் அவர் வந்து பார்க்க மனமின்றி 'வேலையாட்களிடம் காசு கொடுத்து அடக்கம் செய்யச் சொன்னார்'.

இது ஒருபுறமிருக்க‌ கையில் இருந்த சொத்துக்களை எல்லாம் பணமாக மாற்றி அதனை மரக்கடத்தலில் முதலீடு செய்ய நண்பர்களோடு கூட்டு உடன்படிக்கையில் கையொப்பம் இட்டு அதனை செயல்முறைப் படுத்த கூட்டாக ஆயத்தமானார்கள் ராமசாமி நண்பர்கள் குழாம். அவ்வுடன்படிக்கையின்படி முதலீட்டிற்குண்டான பணம் முழுமையும் ராமசாமியைச் சார்ந்தது. சரியான இடத்திற்கு சென்று சேர்ப்பது மட்டும் நண்பர்களுக்குண்டான பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முதலிரு பரிமாற்றங்கள் சுமூகமாக நடந்தது. ஆனால் அடுத்தடுத்த பரிமாற்றங்களில் பணம் கொடுக்கவில்லை, கஸ்டம்ஸிடம் மாட்டிக் கொண்டோம் என்று பல்வேறு காரணங்களை மாலையாகத் தொடுத்து ராமசாமியில் காதில் சுற்ற ஆரம்பித்து விட்டனர். நிலைமை போகப் போக உடன்படிக்கையினை முறித்துக் கொண்டு தானே களம் இறங்குவதாய் ராமசாமி இறங்கினார்.

ஒரு மாத்தில் பல கோடிகளைக் கண்ட நண்பர்களின் கை சும்மாயிருக்குமா என்ன! எப்படியாவது ராமசாமியினைக் காலி செய்ய வேண்டும் என்று வலிமையான திட்டம் தீட்டி வாகன விபத்தில் இறந்து விட்டதாய் முடித்து விட்டனர். அவரும் சாப்பிடாமல் அடுத்தவருக்கும் கொடுக்காமல் அப்படியே மாண்டு விட்டது.



காலங்கள் இப்போது விரைந்தோடின.. வடிவுக்கரசியோ தனக்கு திருமணமே வேண்டாம் என்று தீர்மானித்து வசந்தனை நல்ல நிலைக்கு கொண்டு வர முழுமூச்சாய்ப் பாடுபட்டார். குறிப்பறிந்து கொடுக்கும் ஈகைக்குணத்தினை வசந்தனுக்கு கற்றுக் கொடுக்க அவர் எள்ளளவும் தவறவில்லை. படித்து நல்ல நிலைக்கு வந்த வசந்தன் கிராமங்களில் இருக்கும் மகளிர்குழு உருவாக்கிடும் கைவினைப் பொருட்களையும் மரச்சாமன்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலைத் தொடங்கினான். நல்ல முன்னேற்றம். ஆணவம் இல்லாத அடக்க குணம். அடுத்தவருக்கு உதவும் மனம் என எல்லாம் அவனை மென்மேலும் உயர்த்தியது. நகரத்தில் அவன் செல்வாக்கு உயர்ந்தது.

தனக்கு பின்புலமாய் நின்ற தாய் வடிவுக்கரசியினை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான். அவரை நகரத்தில் வந்து தங்கும்படி பலமுறை கேட்டுக் கொண்டான். வழக்கம் போல ஒருநாள் ஊருக்கு வந்திருக்கும் போது தான் ஊர்க்காரர்களின் புகழாரப் பேச்சினையும் அவன் செவிமெடுக்க நேர்ந்தது. அகம் மகிழ்ந்தே “அம்மா, என்னுடன் வந்து விடுங்களேன்” என்று கேட்டதற்கு வடிவுக்கரசியம்மாள் ”இந்த ஓட்டு வீடு எனது தெய்வம் குடியிருந்த கோவில், இந்த ஓட்டு வீட்டினை விட்டு வேறு எங்கும் உயிர் இருக்கும் வரை செல்லப் போவதில்லை" என்று கட்டாயமாக மறுத்தார் வடிவுக்கரசி.

தன் பிறப்பின் ரகசியம் அறியாத வசந்தன் எதுவுமே சொல்ல முடியாமல் நின்று கொண்டிருந்தான். அப்போது தான் வடிவுக்கரசியம்மாள் தன் இரும்புப் பெட்டியில் இத்தனை நாளும் பாதுகாப்பாய் வைத்திருந்த தன் எஜமானியின் உயிரோவியத்தை எடுத்துக் காட்டி ஓட்டு வீட்டின் உயிர்ப்புத் தன்மையினை வசந்தனுக்கு உணர்த்தினார்.



நன்றி